Translate

Tuesday, 18 July 2017

கலப்பு திருமணம்

கலப்பு திருமண சட்டம் :-
நமது நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தனிதனியாக சட்டங்கள் இருப்பதால், மதம்விட்டு மதம்மாறி திருமணம் செய்து கொள்வதை அந்தந்த மத சட்டங்கள் அனுமதிப்பதில்லை. குறிப்பாக இந்து மதத்தை சேர்ந்த வாலிபர், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி செய்து கொண்டால், அது இரு மதங்களின் திருமண சட்டங்கள் படி ஏற்புடையதுமல்ல. மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரிக்க தொடங்கியதால், அந்த திருமணங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் சார்பில் சிறப்பு திருமணம் சட்டம்-1954 (கலப்பு திருமண சட்டம்) அமல்படுத்தப்பட்டது. இச்சட்டம் கடந்த 1.1.1955ம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் சாதி, மதம், மொழி பேதமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திருமண சட்டத்தின் படி வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும் மத கலாச்சாரம் அல்லது சீர்த்திருத்த முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். அந்த திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.
* திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் ஆணுக்கு திருமணமாகி மனைவி உயிருடன் இருக்ககூடாது. அதேபோல் பெண்ணுக்கு திருமணமாகி கணவர் உயிருடன் இருக்க கூடாது.
* திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் தம்பதிகள் இருவரில் ஒருவர்.
01. மணமகன், மணமகள் இருவரும் மனரீதியாக தெளிவானவர்களாக இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள இருவரின் மனபூர்வமான ஒப்புதல் இருக்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் விருப்பமில்லாமல் திருமண பந்தத்திற்குள் செல்பவர்களாக இருக்க கூடாது.
02 மணமக்கள் மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்பவர்களாக இருக்ககூடாது.
03 திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் மணமகனுக்கு 21, மணமகளுக்கு 18 வயது முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
04 மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்க கூடாது.
05 திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பொருந்தாத உறவினர்களாக இருந்தாலோ- அல்லது அவர்கள் ஒத்துபோகாத உறவினர்களாக இருந்தால் அப்படிப்பட்டவர்களின் திருமணம் 'சட்டப்படி ஏற்றுகொள்ள கூடாத திருமணம்' என்று கருதப்படுவதுடன், அத்தகைய திருமணத்திற்கு சட்டப்படி எந்த அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. ஒருவேளை தம்பதியர்களில் மணமகன் சார்ந்துள்ள சாதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்தால் அங்கீகரிக்கப்படும்.
புதிய சிறப்பு சட்டத்தின் படி திருமண ஏற்பாடு:-
(1) திருமண அறிவிப்பு:- அரசாங்க பதிவு மூலம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள், தங்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக 30 நாட்களுக்கு முன் அரசு திருமண பதிவு அதிகாரிக்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அதில் எந்த இடத்தில், என்ன தேதியில், அந்த மத வழிமுறைப்படி திருமணம் நடக்கிறது என்ற விவரங்கள் குறிப்பிட வேண்டும்.
(2) தகவல் பலகையில் வெளியீடு:- பதிவு திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தம்பதிகள் கொடுக்கும் விண்ணப்ப படிவத்தை பரிசீலனை செய்யும் அரசு அதிகாரி, அதை தனது அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் வெளியிடுவார்.
(3) திருமணம் தொடர்பான தகராறு:- அரசு அலுவலகத்தில் வெளியிடப்படும் திருமண தகவலில் தம்பதிகள் நியாயமான சட்டப்படி திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள் அல்ல என்று யாராவது ஆட்சேபனை மனு கொடுக்கலாம்.
(4) ஆட்சேபனை வந்தால் விசாரணை:- திருமணத்தை எதிர்த்து யாராவது பதிவாளரிடம் ஆட்சேபனை மனு கொடுத்தால், அதற்கான நியாயமான காரணம் தெரிந்து கொள்ள வசதியாக விசாரணை நடத்தப்படும். சம்மந்தப்பட்ட பதிவு அதிகாரி முழுமையாக விசாரணை நடத்துவார். இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் திருமண பதிவு அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது பதிவு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு எதிராக சரியான சாட்சிகள் இல்லாமல் குற்றம் சாட்டி இருந்தால், ஆட்சேபனை மனு தள்ளுபடி செய்வார். நியாயமான காரணங்கள் இருந்தால், திருமணம் செய்து வைக்காமல் மறுத்துவிடுவார். அப்படி பதிவு திருமணம் ஏற்காமல் போகும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

(5) அதிகாரி முன்னிலையில் திருமணம்:- பதிவு திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்து 30 நாட்களுக்கு பின் ஆட்சேபனை எதுவும் வராத நிலையில், சம்மந்தப்பட்ட பதிவு அதிகாரி சாட்சிகளின் கையெழுத்துடன் தம்பதிகள் விரும்பும் கலாச்சாரத்தின் அடிப்படையில் பதிவு திருமணம் செய்து வைப்பார். அத்தகை பதிவு திருமணம் அரசு அலுவலகம் அல்லது தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அதிகாரி நேரில் வந்து நடத்தி வைப்பார். அந்த திருமணத்தை அங்கீகரிக்க தம்பதிகள் இருவர் தரப்பிலும் 3 பேர் சாட்சி கையெழுத்து போட வேண்டும். திருமண நாளில் திருமணம் செய்து வைக்கும் உரிமை பெற்ற அதிகாரி முன் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் மணமகனான (பெயரை குறிப்பிட்டு) மணமகளாகிய உன்னை (மணமகளின் பெயரை குறிப்பிட்டு) சட்டப்படி மனைவியாக ஏற்றுகொள்கிறேன். இருவரும் வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் வரை கணவன், மனைவியாக வாழ ஒப்புதல் அளிக்கிறேன் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதே உறுதி மொழியை மணமகளும் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உறுதிமொழியை தம்பதியரின் உறவினர்கள் மூன்று பேர் சாட்சியாக கையெழுத்திட வேண்டும். அப்போது தான் திருமணம் அங்கீகரிக்கப்படும்.
(6) திருமண சான்றிதழ்:- பதிவு திருமணம் முடிந்த பின், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மணமகன், மணமகள் தம்பதியராக அங்கீகரிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் திருமண பதிவு சான்றிதழின் இரு ஒரிஜினலை கணவன், மனைவியிடம் பதிவு அதிகாரி வழங்குவார். விவாகரத்து பெற நியாயமான காரணங்கள்
» திருமணமான பின் கணவர் வேறொரு பெண்ணுடனோ அல்லது மனைவி வேறொரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்தால்.
» விவாகரத்து மனு தாக்கல் செய்யும் நாளுக்கு முன் இரண்டாண்டுகள் தம்பதிகள் தனிதனியாக பிரிந்து வாழ்ந்திருந்தால்.
» இந்திய தண்டனை சட்டத்தின் படி தம்பதியரில் ஒருவர் தண்டனைக்குரிய குற்றம் செய்து நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருந்தால்.
» திருமணம் முடிந்த பின் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொடுமைப்படுத்தினாலோ.
» தம்பதியரில் ஒருவர் குணபடுத்த முடியாத மன நோயாளியாக இருந்தால்.
» தம்பதியரில் ஒருவர் 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போய், அது குறித்து முழுமையான தகவல் இல்லாத பட்சத்தில்.தம்பதி விருப்பத்தின் பேரில் விவாகரத்து
திருமணமான தம்பதி எதிர்பாராத சூழ்நிலையில் ஒன்றாக வாழவே முடியாது எனும் பட்சத்தில் அவர்கள் தங்களின் திருமண உறவை முறித்து கொள்ள முடியும். இருவரும் பிரிந்துவிட ஒன்றாக சுய விருப்பத்துடன் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.
» விவாகரத்து மனுவை திருமணமாகி ஓராண்டு முடிவதற்குள் தாக்கல் செய்ய முடியாது.
» விவாகரத்து பெற்ற பின் இருபாலரும் தங்கள் விரும்புவோரை திருமணம் செய்து கொள்ளலாம்.
» கிறிஸ்துவ திருமண சட்டத்தின் படி திருமணமான தம்பதிகள் நீதிமன்றத்தின் மூலமே விவாகரத்து பெற முடியுமே தவிர, வேறு வழியில் விவாகரத்து பெற முடியாது. அப்படி பெற்றால் அது சட்டப்படி செல்லாது.
» தம்பதி ஒன்றாக வாழ முடியாத நிலையில் விவாகரத்து பெறுவதாக எழுத்து மூலம் பத்திரம் எழுதி கொண்டு பிரிந்துவிடுவது சட்டபடியான விவாகரத்து என்று ஏற்றுகொள்ள முடியாது. 

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...