Translate

Friday, 4 August 2017

No Need Attested

அட்டஸ்டேஷன் இனி தேவை இல்லை ! அரசு அறிவிப்பு !!
-----------------------------------------------------------------------
பள்ளி, கல்லூரி, வேலை வாய்ப்பு என எதற்கு விண்ணப்பித்தாலும், சான்றிதழ் நகல்களுக்கு அட்டஸ்டேஷன் (சான்றொப்பம்) பெற்று அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

விண்ணப்பத்தைப் பெறுபவர்களுக்கு அட்டஸ்டேஷன் அவசியம் என்கிறார்கள். இதைக் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம் என்றாலும், சட்டப்படி அட்டஸ்டேஷன் அவசியமில்லை. இந்த விவரத்தைப் பிரதமரின் அலுவலக இணையத்தளத்திலேயே வெளியிட்டு இருக்கிறார்கள்.

பெற்றோர்களும், பிள்ளைகளும் அட்டஸ்டேஷன் வாங்குவதற்குப் பல அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரை (Gazetted Officer) தேடி அலைய வேண்டி இருக்கிறது.

பெரும்பாலும், கிராமப்புறங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் இருக்க மாட்டார்கள். நகரப்பகுதியில்தான் இருப்பார்கள். சிலர் அட்டஸ்டேஷன் போடுவதற்கு நூறு ரூபாயில் இருந்து ஐந்நூறு ரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்தான் அட்டஸ்டேஷன் வாங்குகிறோம் என்பதற்கான எந்த நடைமுறையும் இல்லை. இப்போது அரசு அலுவலகங்களில் ஒய்வுப்பெற்றவர்கள் கூட அட்டஸ்டேஷன் போடுகிறார்கள். ‘உண்மையில் அட்டஸ்டேஷன் அவசியமா?’ என்ற கேள்வியோடு வருமானவரித் துறையின் மூத்த அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி சந்தித்தோம்.

"ஜெராக்ஸ் மிஷின் வருவதற்கு முன்பு, சான்றிதழ்களின் விவரங்களை டைப்ரைட்டிங் செய்து அதனை விண்ணப்பத்துடன் இணைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது டைப்ரைட்டிங் செய்ததில் எந்தப் பிழையும் இல்லை என்பதற்கான சான்றொப்பமிடும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது ஜெராக்ஸ் மிஷின் மூலச் சான்றிதழை அப்படியே நகலேடுத்து தருகிறது. ஆனால் இன்னமும் டைப்ரைட்டிங் காலத்தில்தான் இருக்கிறோம்.

அரசிதழில் இடம்பெற்ற அலுவலர்களைத்தான் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் (Gazetted Officer) என்று அழைப்பார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் 'குரூப் பி' நிலையில் இருக்கும் அதிகாரிகள் அட்டஸ்டேஷன் செய்யலாம். கிராமப்புறங்களில் போஸ்ட் மாஸ்டர், வங்கி கிளை மேலாளர் என எல்லோரும் சான்றொப்பம் இடுவார்கள். ஆனால் அவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் கிடையாது. அவர்களுக்குத் தெரியாமல் சான்றொப்பம் செய்து வருகிறார்கள்.
யாரோ ஒருவர் சான்றொப்பமிடுவதை நம்பும் அலுவலகங்கள் விண்ணப்பிக்கும் நபர் சான்றொப்பமிடுவதை நம்ப மறுப்பது அபத்தமாக இருக்கிறது. பள்ளியில் சேரும்போதோ அல்லது வேலைக்குச் சேரும்போதோ மூலச்சான்றிதழை (Original Certificates) பார்த்துவிட்டுதான் சேர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கும்போது பிரயோசனமே இல்லாத விஷயத்தை வைத்துக்கொண்டு மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள். இதனால் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் சான்றிதழ்களைப் பார்த்து சான்றொப்பமிடுவதற்கு கைகட்டி நிற்பதும், அதற்கு பணம் கொடுப்பதும் தேவையற்றது.

இதனை உணர்ந்த பிரதமர் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 'சான்றொப்பமிடும் வழக்கத்தையும், நோட்டரி பப்ளிக்-யிடம் உறுதிமொழி பத்திரங்கள் (Affidavits) பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சுயசான்றொப்பமிடும் (Self Attestation) வழக்கத்தைக் கொண்டு வாருங்கள்' என்று அறிவுறுத்தினார். பிரதமரின் ஆலோசனையை ஏற்று மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள், துறைச்செயலர்கள் அனைவருக்கும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் உறுதிமொழி பத்திரங்கள் தேவையில்லை. சுயசான்றொப்பம் போதுமானது' என்று சுற்றறிக்கையை அனுப்பியது. ஆனால், இன்னமும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒருவர் மூலச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை மறைத்தால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். இதை நிர்வாக சீர்திருத்தக்குழுவும் வலியுறுத்தி இருக்கிறது.விண்ணப்பம் பெறுபவர்கள் பொதுமக்களின் கஷ்டங்களை உணர்ந்தும், தேவையில்லாத வழக்கத்தைக் கைவிடுவது நல்லது" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் இன்னமும் பழைய முறையைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவது முன்னேற்றாமல் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. இளைஞர்களே,
விண்ணப்பிக்கும் போது சுயசான்றொப்பமிடும் (Self Attestation) மட்டும் வழக்கத்தில் கொள்ளுங்கள்.

அரசுப் பணி மற்றும் படிப்புக்கான விண்ணப்ப சான்றிதழ்களில் இனி விண்ணப்பதாரர்களே சான்றொப்ப கையொப்பமிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பணி மற்றும் படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவு பெற்ற கெசட்டட் அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது.

ஒவ்வொரு தடவை சான்றொப்பம் வாங்குவதற்கு, ரூ.100 முதல் ரூ.500 வரை செலுத்த வேண்டும். இதனால்  வேலை தேடுபவர்கள், மாணவர்கள் என பலரும் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும், ஏதேனும் ஒரு சான்றிதழ் இல்லாவிட்டால், அதிகாரிகளும் கையெழுத்திட மறுத்து வந்தனர். இதனால் கிராமப்புற மக்களும், பழங்குடியின மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இனி வரும் காலங்களில் வேலை மற்றும் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவு அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...